செங்கல்பட்டு அருகே புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டது- மின்ரயில் சேவைகள் கடும் பாதிப்பு!
சென்னை: செங்கல்பட்டு அருகே புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டது. இதனால் சென்னைக்கு வரக் கூடிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
சென்னையிலிருந்து செங்கல்பட்டு, தாம்பரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு புறநகர் ரயில்கள் சென்று வருகின்றன. இதில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சென்னையில் உள்ள நிறுவனங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுமட்டுமில்லாது இவ்வழியாக விரைவு ரயில்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் செங்கல்பட்டு அருகே புறநகர் ரயில் தடம்புரண்டது. இதனால் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
தடம்புரண்ட ரயிலை சீர் செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை எந்த வித உயிரிழப்புகளோ, காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த விபத்து சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.