தூத்துக்குடியில் இருந்து விரைவில் பயணிகள் கப்பல்... துறைமுகம் இன்ப செய்தி!
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரிக்கு 3 மாதத்தில் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளதாக துறைமுகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு 3 மாதத்தில் சிறிய பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது என்று தூத்துக்குடி துறைமுக துணைத் தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்தில் தக்ஷன் பாரத் சரக்கு பெட்டக தளத்தில் இருந்து ஆயிரம் சரக்கு பெட்டக கொள்ளவு கொண்ட புதிய பெரிய கப்பல் சேவையை துறைமுக துணைத்தலைவர் நட்ராஜன் இன்று துவக்கி வைத்தார். இந்த போக்குவரத்து தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வாரம் இருமுறை இயக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்ச்கிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துறைமுக துணைத் தலைவர் நட்ராஜன் கூறியதாவது: தூத்துக்குடி துறைமுகத்தின் கொள்ளவை அதிகப்படுத்த கடலை ஆழப்படுத்தும் திட்டத்தை செயல் படுத்த உள்ளோம். மைனஸ் 16 மீட்டர் ஆழப்படுத்த உள்ள இந்த பணிகள் மூன்று வருட காலத்தில் நிறைவடையும். இதையடுத்து தூத்துக்குடி துறைமுகத்திற்க்கு மிகப்பெரிய கப்பல்கள் வந்து செல்லும்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ஆகிய இடக்களுக்கு சிறிய பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக பயணிகள் கப்பல் இயக்க விருப்பம் உள்ளவர்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. பின்னர் விருப்பம் உள்ளவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி இற்கான செயல் திட்டம் வடிவமைக்கப்படும். மூன்று மாதத்தில் இந்த பயணிகள் சேவை துவங்கப்படும் என்றும் துறைமுக துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.