திருச்சி-நெல்லை இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு... பயணிகள் மகிழ்ச்சி!
திருச்சியில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை: நெல்லை வரை வரும் இன்டர்சிட்டி ரயில் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக திருச்சியில் இருந்து நெல்லைக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை நெல்லையிருந்து திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து கடந்த மார்ச் மாதம் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி இன்று முதல் இன்டர்சிட்டி ரயில் திருச்சியில் இருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரம் வரை செல்கிறது.
திருச்சியில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எண்22627 காலை 7.05 புறப்பட்டு, 9.20 மணிக்கு மதுரைக்கும், 12.30 மணிக்கு நெல்லைக்கும் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 3.25 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.மறு மார்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எண்22628 காலை 11 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 2.35 மணிக்கு வந்து சேரும். பிற்பகல் 2.40 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 5.20 மணிக்கு மதுரைக்கும், இரவு 8.15 மணிக்கு திருச்செந்தூருக்கும் சென்று சேர்கிறது.
இதற்கான தொடக்க விழா இன்று காலை 7.05 திருச்சியில் நடைபெற்றது. திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி ரயிலை குமரி, கேரள பயணிகள் வழிநெடுக வரவேற்க காத்திருக்கின்றனர். திருச்சியில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.