செங்கோட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு- அதிகாரிகளின் அலட்சியத்தால் புறப்பட்ட ரயில்-பயணிகள் தவிப்பு
நெல்லை : செங்கோட்டை ரயில்வே மேலாளரின் கவனக்குறைவு காரணமாக ரயில்நிலையத்தில் பயணிகளுக்குள் ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பலர் கடும் அவதிக்குள்ளாயினர்.
தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் நேற்று விடுமுறை முடிந்து தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அந்த வகையில், தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில், பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ் பிரஸ், மதுரை, நெல்லை பயணிகள் ரயில் ஆகிய ரயிகளுக்கு முன்பதிவில்லாத பயண சீட்டுக்கள் பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் பயணசீட்டு வழங்கு பகுதியில் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர்.
கூட்ட நெரிசல்
இந்த ரயில்நிலையத்தில் முன்பதிவுக்கு ஒரு கவுண்டரும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்திட இரண்டு சாதாரண பயணசீட்டு கவுண்டர்களும் உண்டு.
ஆனால் இன்று சாதாரண பயணச் சீட்டு பெற ஒரு கவுண்டர் மட்டுமே திறக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருந்தது. இதனால், நூற்றுக்கும் அதிகமான பயணிகள், பயணிகள் ரயிலுக்கு பயணசீட்டு பெறுவதற்காக காத்து நின்றனர். பயணிகள் அதிக எண்ணிக்கை காரணமாக மதுரை பயணிகள் ரயில் புறப்படும் நேரம் நெருங்கியது. ஏராளமான பயணிகளின் குடும்பத்தினர் ரயிலுக்குள் இருந்தனர்.
முண்டியத்த மக்கள்
எனவே, ரயிலை 10 நிமிட தாமதத்திற்குப்பின் இயக்க வேண்டும் என நிலைய அதிகாரியிடம் பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திட்டமிட்ட சரியான நேரத்தில் பயணிகள் ரயில் புறப்பட்டது. இதனால் பதட்டமடைந்த பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள், பயணசீட்டு வாங்காமல் ஓடிபோய் முண்டியடித்து ரெயிலில் ஏறினர்.
பரபரப்பு
சிலர் பயணச்சீட்டு வாங்கியும் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பயணிகள் முண்டியடித்து ஓடியதால், வயதானவர்களில் சிலர் தண்டவாளத்தில் விழுந்து விடும் நிலைக்கு உள்ளாயினர். அவர்களை ரயில்வே பணியாளர் பாதுகாப்பாக அழைத்து சென்று ரயிலுக்குள் ஏற்றிவிட்டனர். ஏராளமானவர்கள் குழந்தை குட்டிகளோடு ஓடும் ரயிலில் ஏற முயற்சித்தனர். இதனால் செங்கோட்டை ரெயில்நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
அதிகாரிகளின் அலட்சியம்
செங்கோட்டை ரயில்வே மேலாளரின் கவனக்குறைவே பயணிகளின் அவதிக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் முன்பதிவு மையத்தில் கவுண்டர்கள் திறந்திருந்தால் இந்த அவலமும் ஏற்பட்டிருக்காது, பயணசீட்டு வாங்கியும் ரயிலில் பயணிக்க முடியாத நிலையும் நடந்திருக்காது. தள்ளுமுள்ளுவினால் பயணிகளின் உயிருக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால் என்னாவது? இனியாவது ரயில்வே அதிகாரிகளின் பயணிகளின் கோரிக்கையை செவிசாய்க்க முன்வருவது நல்லது.