தீபாவளி... அனுமார் வால் போல நீளும் வெயிட்டிங் லிஸ்ட்.. ஸ்பெஷல் ரயில் இயக்க கோரிக்கை #diwali
ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நீண்டு கொண்டே போவதால் தென் மாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை: தீபாவளி பண்டிக்கைக்கு ரயில்களில் முன்பதிவுகள் முடிந்து காத்திருப்போர் பட்டியல் நீண்டு வருவதால் சிறப்பு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் எப்போதும் நிரம்பி வழிகின்றன. பண்டிகை காலத்தில் சொல்லவே வேண்டாம். இடமே இல்லாத அளவுக்கு பயணிகள் ரயில் பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழியும். நடக்கக் கூட முடியாத அளவுக்கு உட்கார்ந்தும், நின்றும் பயணிகள் பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்தாண்டு தீபாவளிக்கு சென்னையிலிருந்து இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, செந்தூர், குருவாயூர், முத்துநகர், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கி உடனே முடி்ந்து விட்டது.
தற்போது இந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 300ஐ தாண்டி விட்டது. வருகிற 29ம் தேதி தீபாவளி கொண்டாப்படும் நிலையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எந்த ரயிலிலும் இடமில்லை.
சுவிதா உள்ளிட்ட சில ரயில்களில் இடம் இருந்தாலும் அதன் டிக்கெட் விலை ரூ.2500, 3 ஆயிரம் என உயர்ந்து கொண்டு இருப்பதால் அதை யாரும் சீண்டவில்லை. அதற்கு ஆம்னி பஸ்களே பரவாயில்லை என்ற சூழலில் பலர் இருக்கின்றனர்.
அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பஸ்களில் முழுமையாக டிக்கெட் நிரம்பி விட்டதால் பலர் திண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் பயணிகளின் நலன் கருதி தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செங்கோட்டை-புனலூர் அகல பாதை பணிகள் தீவிரம்
இதற்கிடையே, செங்கோட்டை-புனலூர் இடையே அமைக்கப்பட்டுள்ள அகல பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இந்த பாதையில் விரைவில் ரயில் இயக்கப்படும் என தெரிகிறது.
செங்கோட்டை-புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக 106 ஆண்டுகளாக இயக்கி கொண்டிருந்த மீட்டர் கேஜ் ரயில் போக்குவரத்து கடந்த 2010 செப்டம்பர் 26ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த வழித்தடத்தில் சுமார் 59 கிமீ தூரம் ரூ.355 கோடியில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. 5 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் நிறைவு பெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அகல பாதை பணிக்காக ரூ.101 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பணிகள் தீவிரம அடைந்தன. இந்த வழித்தடத்தில் செங்கோட்டை பகவதிபுரம், கழுதுருட்டி, தென்மலை, எடமன், புனலூர் உள்பட 10 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் முக்கிய ரயில் நிலையங்களை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
பிளாட்பாரம், தண்டவாளத்தை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. மேலும் பாலம் கட்டும் பணி, ஏற்கனவே இருந்த குகைகள் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது புனலூர்-எடமன் இடையே தண்டவளத்தில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உறுதிப்படுத்தும் விதமாக பேக்கிங் செய்யும் பணி தொடங்கியுள்ளது.