மருத்துவர்களின் மறியலைக் கண்டித்து நோயாளிகளின் உறவினர்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு!
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைக் கண்டித்து நோயாளிகளின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைக் கண்டித்து நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் விஜய் என்பவர் மேல்மருவத்தூர் ஆதிபரசாக்தி பொறியியல் கல்லூரில் படித்து வருகிறார். கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மாணவரை சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காயமடைந்த மாணவர் விஜய்க்கு முறையாக சிகிச்சை தரவில்லை என கூறி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மருத்துவர்களை தாக்கியதாக தெரிகிறது.
இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே மருத்துவர்களின் போராட்டத்தைக் கண்டித்து அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதாக கூறி அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் சாலை மறியல், செய்தியாளர்கள் போராட்டம், நோயாளிகளின் உறவினர்களின் போராட்டம் என மருத்துவமனை வளாகமே போராட்டக் களமாக காட்சி அளித்தது.