"அந்தப் பக்கம் கவிதா, சங்கீதா.. இந்தப் பக்கம் மனோன்மணி, மலர்விழி.. நடுவே எழிலரசி..."
சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் உத்தரவுப்படி, சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் அதிமுக சார்பில் ஒரு சிறப்புப் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அதில், அம்மாவின் வெற்றிக்குக் காரணம் அளக்க முடியாத அறிவாற்றலா, அள்ளி முடித்த.. ஸாரி அள்ளிக் குவித்த சாதனைகளா என்ற தலைப்பில் அந்த பட்டிமன்றத்தை நடத்தி "வெழா"வைச் சிறப்பித்து விட்டார் அமைச்சர் பா. வளர்மதி...!
கிடைக்கிற கேப்பில் கெடா வெட்டுவது என்பதற்கு அதிமுகவிடம்தான் பாடம் கற்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் வளைத்து வளைத்து அம்மா புகழ் பாடி விடுகின்றனர் அம்மாவின் பக்தர்கள்.
இந்த முரட்டு பக்தர்களிடம் சர்வதேச மகளிர் தினம் சிக்கிக் கொண்டு விட்டதுதான் கொடுமையானது.
சென்னை பாரிமுனை பாரதி மகளிர் கல்லூரியில் கிராமிய பெண்கள் பங்கேற்ற தப்பட்டம் மற்றும் கல்லூரி பெண் பேராசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றத்தை அதிமுக இலக்கிய அணி செயலாளர் அமைச்சர் பா.வளர்மதி துவக்கி வைத்தார்.
அப்போது, சரித்திரம் படைத்த மகளிர் வரிசையில் சகாப்தம் படைத்த அம்மாவின் வெற்றிக்கு காரணம் அளக்க முடியாத அறிவாற்றலா? அள்ளிக்குவித்த சாதனைகளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. அதற்கு பேராசிரியை தீபம் எழிலரசி நடுவராக இருந்தார்.
பேராசிரியைகள் கவிதா ஜவகர், சங்கீதா ஆகியோர் அளக்க முடியாத அறிவாற்றலே என்ற அணியிலும், பேராசிரியைகள் மனோன்மணி, மலர்விழி, ஆகியோர் அள்ளிக்குவித்த சாதனைகளே என்ற அணியிலும் வாதிட்டனர்.
கல்லூரி முதல்வர் லில்லி உள்பட பலரும், மாணவிகளும் கலந்து கொண்டு அம்மா புகழ் பாடியதைக் காது குளிரக் கேட்டு மகிழ்ந்து கலைந்தனர்.