ஐயப்பா பைனான்ஸ் இன்று அய்யயோ பைனான்ஸ் - 1 கோடி ரூபாய் பணம், நகையுடன் "ஓட்டம்"!!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் கிட்டதட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடன் அடகுக் கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வல்லாளப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் என்பவர். தன்னுடைய குடும்பத்துடன் கிடாரிப்பட்டியில் வசித்து வந்தார். அங்கு "ஐயப்பா அண்ட் கோ" என்ற பெயரிலான அடகுக் கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார். மேலும், கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கிடாரிப்பட்டியின் ஊர்க்கணக்குகளையும் கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவரிடம் ஊர்மக்கள் கொடுத்து வைத்திருந்த 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, பணத்துடனும், ஊர்க்கணக்கு பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். இவரால் அடகு பிடிக்கப்பட்ட நகைகள் மட்டும் 2 கிலோ இருக்கும் என்று ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். மொத்தம் சுமார் ரூ1 கோடி பணம், நகைகளுடன் ராமர் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
தலைமறைவான ராமர் மற்றும் குடும்பத்தினரை பொதுமக்களின் புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.