வாட்டும் வெயிலில் ஜெயலலிதா ஏன் பிரசாரம் செய்கிறார் தெரியுமா? பழ.கருப்பையா விளக்கம்
சென்னை: ஜெயலலிதா ஏன் பகல் நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து, பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை உணர செய்கிறார் என்பதற்கான காரணத்தை அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பழ.கருப்பையா நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுக மாவட்ட செயலர்களின் முதன்மையான வேலைகளில் ஒன்று, ஜெயலலிதாவின் கூட்டத்திற்கு ஆள் திரட்டுவது தான்.
இதுபோன்ற கூட்டங்களுக்கு ஆள் திரட்ட செலவு செய்ய நேரிடும் என்பது தான், மாவட்ட செயலர் கொள்ளையடிப்பதை கண்டுகொள்ளாமல் இருக்க முதற்காரணம். அனைவருமே, தங்கள் நிலைக்கும் அதிகாரத்திற்கும் தக்க, மக்களை சுரண்டிக் கொள்ளலாம்.
மாலையில் நடக்கிறது
இது, கடுமையான கோடை காலம். முந்தைய காலங்களில் எல்லாம் மாலை வேளைகளில் தான் பொதுக் கூட்டங்கள் நடக்கும். இப்போதும் பிற கட்சிக் கூட்டங்கள் எல்லாம், மாலை தொடங்கி இரவு வரை நடக்கின்றன.
பிரியாணியுடன் பிரசாரம்
ஆனால், ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்கள் மட்டும் பட்டப்பகலில் தான் நடக்கும். கூட்டத்திற்கு வந்து செல்வதற்கு வண்டி வசதி உண்டு. பகல் 12.00 மணிக்கே அவர்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டு விடுவதால், பிரியாணி பொட்டலம் மற்றும் தலைக்கு 300 ரூபாய் தரப்படுகிறது.
கை தட்டும் வேலை
அவர்களுக்கு ஒரேயொரு வேலை மட்டும்தான் உண்டு. மூன்று, நான்கு மணித்துளிகளுக்கு ஒருமுறை கைதட்ட வேண்டும். எப்போது தட்ட வேண்டும் என்று, இவர்களை அழைத்து வந்த வட்ட செயலர் தட்டி தொடங்கி வைப்பான். அவன் செய்வதைப் பார்த்து செய்தால் போதும்.
பொட்டல் காடு
ஆடு மேய்ப்பவன் கூட, ஆடுகளை மேய விட்டுவிட்டு, மர நிழலை அண்டியிருப்பான். ஆனால், விருத்தாசலம் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள், மொட்டை வெயிலில், மொட்டை பொட்டலில் அமர வைக்கப்பட்டு இருந்தனர்.
காசுக்காக கெடுபிடி
தண்ணீர் குடிப்பதற்கும், சிறிது நிழலில் உட்கார சென்றவர்களையும், கட்சிக்காரர்களும், காவல் துறையினரும், தடுத்து நிறுத்தியுள்ளனர். காசையும் வாங்கிக்கிட்டு, அம்மா (ஜெயலலிதா) வரும் நேரத்துல வெளியே போவீயா? வாங்குன ரூபாயை நினைச்சுகிட்டா வெயில் சுடாது என்று கூறி அடக்கி உட்கார செய்துள்ளனர்.
நோயால் இறந்தார்களாம்
இந்த அடக்குமுறையின் விளைவால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, பொதுக்கருத்துக்கு பயந்து, ஏதோ ஒன்றிரண்டு லட்சங்கள் வழங்குவார். இவ்வளவையும் செய்துவிட்டு, இரண்டு பேரும் நோவினால் இறந்து விட்டனர் என்று அறிக்கை வெளியிட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மதிப்பு
இதுபோன்ற கூட்டங்களை மாலை வேளையில் நடத்தலாம், ஆனால், அது ஜெயலலிதாவுக்கு வசதிப்படாது. ஜெயலலிதா சாதாரணமானவரா? 'எனது ஆட்சி; எனது ஆட்சி' என்று எக்காளமிடுபவர், தரை வழியே செல்வது அவருடைய மதிப்பிற்கு உகந்ததாக இருக்க முடியுமா?
இரவில் பறக்காது
ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் தான் செல்வார். ஹெலிகாப்டர் இரவில் பறக்காது, 5 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே தான், பகல் 2.00 மணிக்கு பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. எவன் இந்த வெயிலில் கூட்டம் கேட்க வருவான்? எனவே தான், காசு கொடுத்து கூட்டம் திரட்டப்படுகிறது.
மிருக வதை
வாகனங்களில் அளவுக்கு மீறி மாடுகளை ஏற்றிச் செல்பவர்களின் மீது, உயிர் வதை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெயில் கொடுமை தாங்காமல் சிறிது வெளியே செல்ல நினைத்தவர்களை, போலீசை வைத்து அச்சுறுத்தியவர்களின் மீது, ஏன் விசாரணை நடத்தி தண்டிக்கவில்லை? இது உயிர்வதை இல்லையா? என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்?. இவ்வாறு பழ.கருப்பையா பேட்டியளித்துள்ளார்.