பழ.நெடுமாறன் உள்ளிட்ட 85 பேருக்கு ஜாமீன்: நடராஜனுக்கும் முன்ஜாமீன்…
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் நினைவாக தஞ்சாவூரில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. பெரும் சர்ச்சைக்கிடையே உலக தமிழர் பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட இந்த நினைவு முற்றம் கடந்த 8 ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து நினைவு முற்றம் கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு அதன் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டது. அதேவேளையில், விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் அங்கு ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 85 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் பழ.நெடுமாறன் உள்பட 85 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைதான 85 பேரும் ஜாமீன் கேட்டு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தற்போது, பழ.நெடுமாறன் உள்பட 85 பேர் சார்பில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பழ.நெடுமாறன் உள்பட 85 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது
நடராஜன், செல்வராஜ் ஆகியோருக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.