தமிழ்நாடு உருவான 60-ம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: பழ.நெடுமாறன்
சென்னை: தமிழ்நாடு உருவான 60ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நவம்பர் முதல் நாள் தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாளாகும். சங்க காலத்திலிருந்து 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் மொழிவழியாக தமிழ்நாடு பிரிக்கப்படும் காலம்வரை தமிழகம் ஒரே பகுதியாக இருந்ததில்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்களுக்கு உரியதான தமிழ்நாடு உருவான நாளை நாம் மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
அதிலும், குறிப்பாக இந்தாண்டு தமிழ்நாடு உருவாக்கப்பட்டு 60-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனவே, கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும், மாலையில் பொதுக்கூட்டம் நடத்தியும் கொண்டாடுமாறு அனைத்து தமிழர்களையும் வேண்டிக்கொள்கிறேன்'' என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.