பிரபாகரன் சிலை, படங்களை அகற்றினால் போராட்டத்தில் குதிப்போம்: தமிழக அரசுக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை
தஞ்சை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் சிலைகள் மற்றும் படங்களை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்தால் தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறவழியே இல்லை என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாற்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனநாயக உரிமையை பறிக்கும் அதிமுக அரசை எச்சரிப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழர் பேரமைப்பின் 8வது மாநாடு நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்தில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் சிலைகள், படங்கள் ஆகியவற்றை வைத்தால் அவற்றை அகற்றிவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு போடுவதை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழக அரசின் இந்த செயல் ஜனநாயக உரிமைகளை பறிப்பது ஆகும். இது வன்மையாக கண்டிக்க வேண்டியது ஆகும். ஜனநாயக உரிமையை பறிக்கும் அரசு ஒருநாளும் மக்களின் அரசாக முடியாது.
அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை அதிமுக அரசு பறித்து வருவது வருத்தத்திற்குரியதாகும். தமிழக அரசு இது போன்ற போக்கை இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும். திருத்திக்கொள்ளாவிட்டால் அரசை கண்டித்து போராட்டங்கள். ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை. இதை அதிமுக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு பழ. நெடுமாறன் கூறினார்.