பழநி கோவில் நடை அடைப்பு.. பக்தர்கள் வெளியேற்றம்!
சந்திரகிரகணத்தை முன்னிட்டு பழநி முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது.
பழநி: சந்திரகிரகணத்தை முன்னிட்டு பழநி முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது. பக்தர்களும் கோவில் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
152 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மூன்று அரிய நிகழ்வுகளுடன் சந்திரகிரகணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவில் நடைகள் இன்று மாலை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
கிரகணம் முடிந்த பின்னரே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
ஆனால் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கே பழநி முருகன் கோவிலின் நடை அடைக்கப்பட்டது. முன்னதாக பகல் ஒரு மணி முதலே பக்தர்கள் மலையேற கோவில் நிர்வாகம் தடை விதித்தது.
மலையில் திரண்டிருந்த பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும் இரவு 9 மணிக்கு கிரகணம் முடிந்த பின்னர் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆனால் நடை திறந்தாலும் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.