தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது ஏன் எப்ஐஆர் போடலை?.. ப.சிதம்பரம் அதிரடி
பணமதிப்பு நீக்க அறிவிப்பு மிகப்பெரிய இமாலய தவறு என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: ஆர். கே. நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. பணவிநியோகம் செய்த அமைச்சர்கள், முதல்வர் மீது ஏன் வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
தந்தி தொலைக்காட்சியில் பேட்டி அளித்த ப.சிதம்பரம், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கறுப்பு பணத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளித்தார்.
பாஜக அரசு அறிவித்த பணமதிப்பு நீக்கம் ஏன் மிகப்பெரிய தோல்வி என்று புள்ளிவிபரமாக பட்டியலிட்டார் ப.சிதம்பரம்.
கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது
இந்தியாவில் விசித்திரமான வருமானவரி இருக்கிறது. வேளாண்மை, அறக்கட்டளை, சமயநிறுவனங்கள், பழங்குடியின மக்கள், வடகிழக்கு மாநில மக்களின் வருமானங்களுக்கு வருமானவரி விதிக்க முடியாது. எனவே கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது.
100 கோடி மக்கள் துன்பம்
20 லட்சம் பேர் கணக்கில் காட்ட முடியாத பணத்தை வங்கியில் கட்டியுள்ளனர் என்றால் அதற்காக 100 கோடி மக்கள் மீது துன்பத்தை சுமத்துவதா? லட்சம் பேருக்கு நோட்டீஸ்
100 கோடி மீது துன்பத்தை சுமத்த யார் அதிகாரம் அளித்தது. 2 நாட்கள் பசியோடு இருந்தாலே துன்பம்தான். வங்கி வாசலில் நிற்பது மட்டும் துன்பமல்ல. வயிறுப்போக்கில் குழந்தை உயிரிழந்தது. அதுவும் மிகப்பெரிய துன்பம்தான்.
பணமதிப்பு நீக்கம்
5 நாட்களில் சரியாகவிட்டால் முச்சந்தியில் நிறுத்துங்கள் என்றார். சிறு குறு தொழில்கள் மூடப்பட்டன. அன்றாட வேலை செய்து பிழைப்பவர்கள் சிரமப்பட்டார்கள் என்றார் ப.சிதம்பரம். பணமதிப்பு நீக்கம் என்பதே யாருக்கோ உதவி செய்வதற்காக செய்யப்பட்ட நடவடிக்கை.
இமாலய தவறு
கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியதே கொள்ளைதான். அதற்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஒரு மாபெரும் இமலாய தவறு செய்து விட்டு அந்த தவறால் பயனடைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா?. இமாலய தவறு செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?.
17 லட்சம் பேர்
வருமானவரித்துறையிடம் இருந்து 17 லட்சம் பேருக்கு நோட்டீஸ் கொடுக்க முடியாது. பல ஆண்டுகள் ஆகும். திருடன் என்று நிரூபித்தால் மட்டுமே அந்த பணம் அரசுக்கு கிடைக்கும். இங்கே நோட்டீஸ் அனுப்பிய உடனேயே திருடன் என்று முடிவெடுக்க முடியாது.
ஷெல் கம்பெனிகள்
பணமதிப்பு நீக்கத்திற்கும் ஷெல் கம்பெனிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பணமதிப்பு நீக்கம் செய்யாமலேயே ஷெல் கம்பெனிகளை கண்டுபிடித்திருக்கலாம். நிறுவனம் எல்லாமே போலி நிறுவனங்கள் அல்ல. அந்த நிறுவனத்தின் மூலம் பணபரிமாற்றம் செய்தால் மட்டுமே தவறு. 38, ஆயிரம் நிறுவனங்களை கண்டு பிடித்து 17,000 கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டதை கண்டுபிடித்திருக்கிறார்கள். 38 ஆயிரம் நிறுவனங்கள் சந்தேகத்திற்கு உரிய நிறுவனங்கள். அரசுக்கு பணம் கிடைத்தால் மகிழ்ச்சி.
கறுப்பா? வெள்ளையா?
ஆர். கே. நகர் தொகுதியில் 89 கோடி ரூபாய் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அது கறுப்பு பணமா? வெள்ளை பணமா?. அது குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டதே? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.
முதல்வர் மீது வழக்கு போடலையே
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடரவில்லையே. வருமானவரித்துறை அறிக்கை கொடுத்து,தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து விட்டார்கள்.
குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள், முதல்வர் மீது வழக்கு தொடரவேண்டும். வருமான வரித்துறையே எப்ஐஆர் போடலாம். அமைச்சர்கள் மீது எப்ஐஆர் போடவேயில்லை என்றார்.
சோனியா, ராகுல்காந்தி
65 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி எதுவுமே சொல்லவே இல்லை என்பதை நான் ஆட்சேபிக்கிறேன். சோனியாகாந்தி, ராகுல்காந்தி வழக்கு பற்றி பேசுவதற்கான பேட்டி இல்லை. அவர்கள் மீது இருப்பது விசித்திரமான வழக்கு என்றார் ப.சிதம்பரம்.
சூழ்நிலையே இல்லையே
பணமதிப்பு நீக்கம் என்பது இரண்டு சூழ்நிலைகளில்தான் செய்யவேண்டும் என்று உலக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதீதமான பணவீக்கம் இருந்தால் செய்யலாம். அந்நிய செலவணி மதிப்பில் தாறுமாறான ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் செய்யலாம். நம்ம நாட்டில் அந்த சூழ்நிலையே கிடையாது.
பொருளாதார சரிவு
பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான நியாயமான சூழ்நிலையே நம் நாட்டில் கிடையாது.
பொருளாதாரம் 4 காலாண்டுகள் சரிவில் சென்ற போது பணமதிப்பு நீக்கம் செய்தது என்பது இமாலய தவறு. இந்த சூழ்நிலையில் பணமதிப்பு நீக்கம் செய்யாமலேயே வேறு காரியங்களை செய்திருந்தால் நான் பாராட்டியிருப்பேன். பணமதிப்பு நீக்கம் செய்தது தவறு என்பதில் இம்மி அளவும் எனக்கு எந்தவிதமான மறு சிந்தனையே கிடையாது.