யாருக்காச்சும் சிவகங்கை எம்.பியோட முகம் ஞாபகம் இருக்கா?.. ப.சிதம்பரம் அட்டாக்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் சிவி மெய்யநாதனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை எம்.பி.யை கடுமையாக சாடிப் பேசினார்.
வல்லத்திராகோட்டை, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
5 ஆண்டுகளில் எனது முயற்சியினால் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 408 ஊரணி, கண்மாய்கள் தூர்வாரப்பட்டன. 74 வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. 74,000 முதியோருக்கு உதவித்தொகை, 19,000 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் தவறாக விமர்சித்த முதல்வர் ஜெயலலிதா, செய்த ஒரே சாதனை தெருவெங்கும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை தொடங்கி மக்களை சீரழித்ததுதான்.
உங்களிடம் நான் கேட்கிறேன். யாருக்காவது சிவகங்கை எம்.பியோட பெயர் தெரியுமா.. ஒரு சிலருக்குத் தெரிந்திருக்கலாம். அப்படியே தெரிந்திருந்தாலும் அவரது முகம் தெரியுமா, ஞாபகம் இருக்கிறதா, எங்காவது அவரைப் பார்த்துள்ளீர்களா.
தமிழகத்தில் 54,000 ஆசிரியர் பணியிடங்களோடு 3. 5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை ஏன், அதிமுக அரசு கடந்த 5 ஆண்டுகளாக நிரப்பவில்லை. படித்து முடித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காததால் தான் வாங்கிய கல்விக்கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
தமிழக மாணவர்கள் கண்ணியமானவர்கள். வாங்கிய கடனை கட்டுவார்கள் அதனால் எங்கள் மாணவர்களை கடனை வாங்கிட்டு ஓடி ஒழியும் பணக்காரர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது.
எனவே, இம்முறை திமுக தலைமையில் அமையும் ஆட்சியில் கல்விக்கடனை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியோடு மதுக்கடைகளை மூடுதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஒரு சோகமானது. திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்துள்ளது. இதையெல்லாம் வாக்குறுதியாக சொல்லும் ஜெயலலிதா, ஆட்சியில் இருக்கும்போது ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டார் ப.சிதம்பரம்.
இதோ இவர்தான் அந்த எம்.பி!
ப.சிதம்பம் கேட்டாரே, பாத்திருக்கீங்களா உங்க சிவகங்கை எம்.பியை என்று... அவர் இவர்தான். பெயர் பி.ஆர். செந்தில்நாதன், அதிமுகவைச் சேர்ந்தவர்.