வாருங்கள் வாருங்கள்.. காங்.கில் இணைந்த பீட்டர் அல்போன்ஸுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்த பீட்டர் அல்போன்ஸுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் இன்று பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ப.சிதம்பரம் பீட்டர் அல்போன்ஸை வரவேற்றுப் பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் லட்சியங்களை நிறைவேற்ற நாம் ஒரே காங்கிரஸாக இருக்க வேண்டும். நாம் போக வேண்டிய பாதை இன்னும் இருக்கிறது. நீண்ட நெடிய பயணம் காத்திருக்கிறது.
விரைவில் தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் நமது லட்சியம் நிறைவேறும். பீட்டர் அல்போன்ஸ் அற்புதமான பேச்சாளர். அவரை வாருங்கள் வாருங்கள் என அன்போடு அழைக்கிறேன் என்றார் சிதம்பரம்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து ஜி.கே.வாசன், அவரைப் போல சிலர், அதிகபட்சம் 10 பேர் இருக்கலாம். அவர்களைத் தவிர யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியில் வந்து சேரலாம். இப்படித்தான் பத்திரிகைகள் செய்தி போட வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் பெரிய கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. மீண்டும் காங்கிரசில் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதனை வரவேற்கிறோம். நம்பிக்கையுடன் வந்தவர்களை தாய்வீடான காங்கிரஸ் ஏமாற்றாது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது, அரசியல் ரீதியாக எடுத்த தவறான முடிவுகளை திருத்திக் கொண்டு விட்டோம் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக சென்னை வந்த முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமாகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.