சென்னையில் இலங்கை அதிபர் சிறிசேன கொடும்பாவி எரிப்பு
சென்னை: இலங்கை சிறைகளில் 107 தமிழர்கள் உயிரிழப்புக்கு நீதி கோரி தந்தை பெரியார் தி.க.வினர் நடத்திய போராட்டத்தில் மைத்ரிபால சிறிசேன கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். 2009-ல் இறுதி யுத்தத்தின் போது இலங்கை ராணுவத்தினர் சரணடைந்த பல்லாயிரம் பேரின் கதியும் தெரியவில்லை.
இந்த நிலையில் காணாமல் போனோர் தொடர்பாக இலங்கை உரிய பதிலளிக்க வேண்டும் என்று சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தற்போது இலங்கையின் சிறைகளில் கைதிகளாக இருந்த 107 தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மரணங்களுக்கு நீதி கோரி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் தந்தை பெரியார் தி.க.வினர் முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
அப்போது இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி முற்றுகைப் போராட்டம் நடத்தியதாக கோவை ராமகிருஷ்ணன் உட்பட 100க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.