பொங்கல் பரிசு பையில் கரும்பு காணோமே... ரேஷன் கடை பெண் ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது
சென்னை: அரசு வழங்கும் பொங்கல் பையில் கரும்பு இல்லாததால் ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர், ரேசன் கடை பெண் ஊழியரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய நபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சென்னை வேப்பேரி நரசிங்க பெருமாள் கோவில் தெருவில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் வேலை பார்ப்பவர் உஷாராணி. சனிக்கிழமையன்று அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவர் ரேஷன் கடைக்கு வந்தார். அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப்பொருட்களை கேட்டார்.
கடை ஊழியர் உஷாராணி பொங்கல் கரும்பு இல்லாமல் பச்சரிசி உள்ளிட்ட மற்ற பொங்கல் பரிசு பொருட்களை கொடுத்ததாக தெரிகிறது. கரும்பு இல்லாமல் மற்ற பொருட்களை வாங்க மாட்டேன் என்று ரவி அடம்பிடித்தாக கூறப்படுகிறது.
உள்ளே கரும்புத் துண்டுகளை வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் பொறுங்கள் எடுத்து தருகிறேன் என்று பதில் அளித்துள்ளார்உஷா. ஆனால், ரவியோ, பொதுமக்களுக்கு கரும்பு வழங்காமல் பதுக்குகிறீர்களா? என்று கூறி, மீண்டும் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த ரவி, கையில் வைத்திருந்த கத்தியால் உஷாவின் முகத்தில் ஓங்கி குத்தி விட்டார். அவர் ரத்த வெள்ளத்தில் சாய, பொங்கல் பை வாங்க வந்திருந்த பொதுமக்கள், தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் ரவி, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ரவியை மடக்கி பிடித்தனர். கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ரவியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.