கடலை மிட்டாய்க்கு 18% ஜிஎஸ்டி வரி... கோவில்பட்டியில் கடைகள் அடைப்பு- கண்டன ஆர்ப்பாட்டம்
கடலை மிட்டாய்க்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கோவில்பட்டியில் போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி: கடலை மிட்டாய்க்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறைந்த விலையில் எளிதில் கிடைக்கும் ஏழைகளின் மிட்டாய் என்று அழைக்கப்படும் கடலைமிட்டாய் தயாரிப்பில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி. இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குடிசை தொழிலான கடலை மிட்டாய்க்கு இதுவரை வரி கிடையாது, தற்போது மத்திய அரசு கடலை மிட்டாய்க்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு இனிப்பு பண்டங்களுக்கு ஜிஎஸ்டி 5% விதிக்கப்பட்ட நிலையில் கடலை மிட்டாய்க்கு 18% வரி விதிப்பு தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கடலைமிட்டாய் தொழிலும், உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த 18% வரி விதிப்பைக் கண்டித்தும், கடலை மிட்டாய்க்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவில்பட்டி இ.எஸ்.ஐ.மருந்தகம் அருகே கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.