மாட்டிறைச்சியை தடைசெய்வதால் மக்கள் பெருமளவில் பாதிப்பு... பழ.நெடுமாறன்
மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஏழை, எளிய, விவசாய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.
புதுச்சேரி: மாட்டிறைச்சியை தடை செய்வதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பால் கறக்க முடியாத நிலையில் உள்ள மாடுகளுக்கு தீவனம் போட முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுவையில் தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறன் தெரிவிக்கையில், தமிழகத்தில் காலூன்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டே அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனை முறியடிக்க வேண்டும்.
மாட்டிறைச்சி தடை நடைமுறைக்கு சாத்தியமில்லை. இதனால் விவசாயிகளும், ஏழை, எளிய மக்களும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் ரஜினியை ஏற்பதா வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும என்றார் அவர்.