நெல்லையில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் ...பீதியில் பொதுமக்கள்!
நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பன்றிக்காயச்சால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளித்துவருகிறது. ஆனாலும் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் குறைந்த பாடு இல்லை.
தமிழகம் மட்டும் இல்லாமல் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3 பேர் உயிழந்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக சிலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலுக்கு 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு வந்த 4 பேர் குணமாகி சென்று விட்டனர். 3 பேர் பன்றி காய்ச்சலால் நம் மாவட்டத்தில் உயிர் இழந்துள்ளனர். தற்போது நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பன்றி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை டாக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த பன்றி காய்ச்சல் மூன்று கட்டமாக பரவுகிறது. முதல் கட்டமாக நோயாளிக்கு குறைந்த அளவில் சளி, இருமல், தொண்டை வலி இருக்கும். சிலருக்கு வாந்தி, அல்லது வயிற்று போக்கு இருக்கும். இவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். குடும்ப நபர்களுக்கும் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது கட்டமாக அதிக காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். இதற்கு அடுத்த கட்டமாக மூச்சு விட திணறுதல், நெஞ்சு வலி, இரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.