"நீட்" விதி விலக்கு கதையாக மாறுமா ரேஷன் விலக்கு?.. கவலையில் மக்கள்!
சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு கிடைக்கும் கிடைக்கும் என்று கூறியே காலத்தை ஓட்டி விட்டது தமிழக அரசு. ஆனால் அதில் என்ன நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். இந்த வரிசையில் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கான விதிவிலக்கும் இணையுமா என்று மக்கள் அச்சத்துடன் கேட்கின்றனர்.
ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு சர்வாதிகாரமாக பல்வேறு கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. அதை அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசும் நேற்று ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளது. அதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். மக்களின் அதிர்ச்சி மந்திரியை எட்டியதோ என்னவோ, அமைச்சர் காமராஜர் வந்து விளக்கம் கொடுத்துள்ளார், இதிலிருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு கேட்கப்பட்டுள்ளது என்று.
இப்படித்தான் நீட் தேர்வுக்கும் கூறி வந்தனர், இன்னும் கூட கூறிக் கொண்டிருக்கின்றனர். அதே கதையாக இதுவும் மாறுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட கெஜட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் கிடையாது
குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் பெற முடியாது. தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள். 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகள். மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்களகுக்கு கிடையாது.
ஏசி - 3 ரூம் இருந்தால் கிடையாது
கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் (மாதம் ரூ.8,300) அதிகமாக உள்ள குடும்ப அட்டைகள். பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும், அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியாது என்றும் தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
குடிசை பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள். கிராமப்பகுதியில் அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள். அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தால்
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள். முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள்.விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடும்ப தலைவராக கொண்ட அனைத்து குடும்பங்கள். 40 சதவீதத்திற்கு மிகுதியாக உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள்.
விவசாய கூலித் தொழிலாளர்கள்
விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்கள் ஆகியோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கெஜட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அரசாணை பெரும் அதிர்ச்சி அலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று மக்கள் கொதித்துப் போய் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மக்கள் சம்பாதிக்கக் கூடாதா?
அரசின் அரசாணையைப் பார்த்தால் மக்கள் சம்பாதிக்கக் கூடாது, நல்ல நிலைமைக்குப் போகக் கூடாது. கடைசி வரை இப்படியேதான் இருக்க வேண்டும். அப்போதுதான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று கூறுவது போல உள்ளதாக மக்கள் கோபத்துடன் கேட்கிறார்கள். வருடத்திற்கு ஒரு லட்சம் கூட சம்பாதிக்க கூடாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டமும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என்பது ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது மக்களின் பொதுவான கருத்தாகும்.