ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் குவியும் அதிமுக தொண்டர்கள் !
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுக தொண்டர்கள் ராஜாஜி ஹாலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி சென்னையில் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிளும் அதிமுக தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்தில் கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதா உடலுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவையொட்டி சென்னையில் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் இப்போதே ராஜாஜி ஹாலில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே கேமரா பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு டிஜிபி ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.