குமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைவு - பொதுமக்கள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பு விலை அதிக அளவு குறைந்துள்ளது.
கன்னியாகுமரி : நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சுற்றுப்பகுதிகளில் உள்ள காய்கறிச் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கார்த்திகை, மார்கழிக்கு பிறகு காய்கறி விலை உச்சத்தில் இருந்து படிப்படியாக குறைந்து வந்தது. குமரி மாவட்டத்தில் தற்போது காய்கறி விலை கட்டுக்குள் உள்ளது.
தற்போது கேரட் கிலோ ரூ.20, பூசனிக்காய் ரூ.24, தடியங்காய் ரூ.46, கோவக்காய் ரூ.40, பாகற்காய் ரூ.30 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளது.
கிலோ ரூ.5க்கு தற்போது நாட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பெங்களூரு தக்காளி கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், குமரி சந்தைக்கு திசையன்விளை, காவல்கிணறு போன்ற பகுதிகளில் இருந்து நாட்டு தக்காளி வருகிறது. தற்போது தக்காளி உற்பத்தி அதிகரித்து வரத்தும் அதிகமாக இருப்பதால் விலை சரிவடைந்துள்ளது.
அதே நேரத்தில் நாட்டு தக்காளியை விட பெங்களூரு தக்காளி கூடுதல் நாட்கள் கெடாமல் இருப்பதால் பொது மக்கள் அதனை விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுவும் நாட்டு தக்காளி விலை சரிவுக்கு முக்கிய காரணம் என வருத்தம் தெரிவிக்கின்றனர்.