ஹைட்ரோ கார்பன் திட்ட ஆலையை உடைக்க நான் ரெடி, நீங்க ரெடியா? நெடுவாசலில் நின்றபடி வைகோ ஆவேசம்
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட தயாராக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
புதுக்கோட்டை: ஸ்டெர்லைட் விவகாரத்தை போன்று நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட மக்கள் தயாராக வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். அந்த போராட்டத்தில் முதல் ஆளாக வந்து ஆயுதத்தை கொண்டு ஹைட்ரோ கார்பன் அமைக்கும் ஆலையை உடைப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் பஸ் நிறுத்தம் அருகே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் எந்தப் பிரச்சியாக இருந்தாலும் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பவன் நான்தான். மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முற்பட்டபோது முதலில் நான் குரல் கொடுத்தபிறகு நம்மாழ்வார் குரல் கொடுத்தார்.
மகிழ்ச்சி
ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகிய போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கு பெறுவது மகிழ்ச்சியை தருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் 7 மணி நேரம் தொடர்ந்து வாதாடினேன்.
ஆயுத போராட்டம்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் என்னுடைய நாணயத்தையோ, நேர்மையையோ யாரும் சந்தேகப்பட தேவையில்லை என ஹைகோர்ட்டில் நீதிபதியே பாராட்டினார். வெளிமாநிலத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்ட போது ஆயுதம் ஏந்தி போராடிய பொதுமக்கள் ரூ.300 கோடி மதிப்பிலான அலுவலகத்தை உடைத்தெறிந்தனர்.
உடைக்க தயார்
அதே போன்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழிக்க ஆயுதத்தோடு போராடவும் தயாராக வேண்டும். அதில் முதல் ஆளாக நான் ஆயுதத்தோடு வந்து உடைப்பேன். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் பாஜக தலைவர்கள் உளறி கொண்டிருக்கின்றனர்.
திமுக காரணம்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது, தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்தான். ஆய்வு செய்ய அனுமதி அளித்தது ஜெயலலிதா ஆட்சி. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது பல ஆயிரம் அடிக்கு துளையிடும் போது பூகம்பம் ஏற்படுவது போன்ற பாதிப்பு ஏற்படும் என்றார் அவர்.