அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்
மதுரை: கால்நடைத்துறையிலிருந்து உரிய அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொங்கலையொட்டி இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன. இன்னும் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடந்ததில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அதற்கு அனுமதி வழங்க மறுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதி பாரதிதாசன் முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் சில இடங்களில் முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி, முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என கருத்து தெரிவித்தார்.
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதால் கால்நடைத்துறையிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் போட்டிகளை ஏற்பாடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டார்.