காற்றாடி மாஞ்சா நூல் தொழிற்சாலைக்கு சீல்- விற்பனை செய்த 175 பேர் அதிரடிக் கைது
சென்னை: சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் தயாரித்த தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. காற்றாடி மாஞ்சா நூல் விற்பனை செய்த 175 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று பெரம்பூர் ரயில்வே மேம்பாலத்தில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அஜய் என்ற சிறுவன் மாஞ்சா நூலால் கழுத்து அறுக்கப்பட்டு பரிதாபமாக இறந்து விட்டான்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விடுபவர்கள், காற்றாடி விற்பவர்கள், மாஞ்சா நூல் தயாரிப்பவர்களை வேட்டையாடி பிடிக்கும்படி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
2 சிறுவர்கள் கைது:
சிறுவன் அஜய் இறப்புக்கு காரணமான மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் மாஞ்சா நூலை விற்பனை செய்த சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் குமரன் பேன்சி கடை நடத்தி வரும் பிரதீப் மற்றும் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
30 வருடங்களாக விற்பனை:
மேலும் ஒருவரான முருகன் மாஞ்சா நூலை தனது வீட்டில் வைத்து தயாரித்து கடந்த 30 வருடங்களாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முருகன் வீடு கொரட்டூர், சிவலிங்கபுரம், குமரன் நகரில் உள்ளது. அந்த வீட்டில் துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான் ஜோசப் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
மாஞ்சா நூல் பறிமுதல்:
சோதனையில் முருகனின் வீடு, மாஞ்சா நூல் தயாரிப்பு தொழிற்சாலை போல செயல்பட்டது கண்டறியப்பட்டது. சோதனையில் மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் எந்திரம் மற்றும் மாஞ்சா நூல் பண்டல்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன. மாஞ்சா நூல் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டது.
சென்னை முழுவதும் வேட்டை:
கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் போலீசார் அதிரடி சோதனை வேட்டை நடத்தி, மாஞ்சா நூல் விற்பனை தொடர்பாக 173 வழக்குகள் பதிவு செய்தனர். 175 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் வேட்டையில் மாஞ்சா நூல் பண்டல்கள் 85, சாதாரண வெள்ளை நூல் பண்டல்கள் 120, மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் வஜ்ரம் 2 கிலோ, கலர் பொடி 2 கிலோ, கண்ணாடி தூள் 7 கிலோ, கந்தக பொடி அரை கிலோ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை தொடரும்:
தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். வாரம் இருமுறை காற்றாடி வழக்குகள் பற்றி கூடுதல் கமிஷனர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜ் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களும் இது தொடர்பாக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கமிஷனர் வெளியிட்டுள்ள 25 அறிவுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பேரணி:
மேலும் சென்னை நகர் முழுவதும் காற்றாடி பறக்கவிடப்படும் பகுதிகளை தேர்வு செய்து, அங்கு காற்றாடியால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் கமிஷனர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று சென்னை வியாசர்பாடி உள்ளிட்ட சில இடங்களில் காற்றாடியின் தீமை பற்றிய பேனர்களை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலங்களை போலீசார் நடத்தினார்கள்.