எது எதற்கோ தேர்தலை தள்ளி வைக்கிறீங்க.. இதுக்காக கொஞ்சம் தள்ளி வச்சாதான் என்ன?
ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர்.
சென்னை: ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் அரசு எந்திரம் ஆர்கே நகர் தொகுதியை மட்டுமே சுற்றி வருகிறது.
வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் கடந்த 30ஆம் தேதி கன்னியாகுமரியை நெருங்கியது. அந்தப்புயல் கரையைக்கூட கடக்கவில்லை.
கடலில் இருந்தபடியே கோர தாண்டவம் ஆடியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன.
தீவான பகுதிகள்
வரலாறு காணாத கனமழை கொட்டியது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. வெள்ளப்பெருக்கால் சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகள் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டு தனித்தீவானது.
இதுவரை வந்து சேரவில்லை
புயல் குறித்து முன்னரே தெரிவிக்கப்படாததால் தங்கு கடல் மீன்பிடிப்புக்கு வழக்கம்போல் சென்றனர் மீனவர்கள். ஆனால் ஒரு வாரத்திற்கு முன்பே கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் இதுவரை வந்து சேரவில்லை.
என்ன ஆனதோ என தவிப்பு
பலர் அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன ஆனதோ என குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
எட்டிப்பார்க்காத முதல்வர்
மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை எட்டிப்பார்க்கவில்லை.
இடைத்தேர்தல் இப்போது அவசியமா?
மாறாக முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஆர்கே நகரையே வட்டமடித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பேரிடரில் சிக்கியுள்ள நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் இப்போது அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கவனத்தில்கொள்ளுமா தேர்தல் ஆணையம்?
ஆர்கே நகர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டால் ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் களத்தில் இறங்கி மக்களுக்காக பணியாற்றும். எது எதற்காகவோ தேர்தலை தள்ளி வைக்கும் தேர்தல் ஆணையம் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டால் மக்களின் நன்மதிப்பை பெறமுடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..