சென்னையில் பொதுபாதையை ஆக்கிரமித்த நித்தியானந்தா சீடர்கள்- அடித்து துரத்திய பொதுமக்கள்!
சென்னை திரிசூலம் அருகே தனிநபரின் இடத்தை ஆக்கிரமித்தும், பொது பாதையை ஆக்கிரமித்தும் கேபின்கள் அமைத்த நித்தியானந்தா சீடர்களை அப்பகுதி மக்கள் அடித்து விரட்டினர்.
சென்னை: சென்னை திரிசூலம் அருகே கோயிலுக்கு செல்லும் பொது பாதையை ஆக்கிரமித்ததாக நித்தியானந்தாவின் ஆட்களை மக்கள் அடித்து விரட்டினர்.
திரிசூலம் அருகே பச்சையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை நித்தியானந்தாவின் சீடர்கள் வந்தனர். பின்னர் அங்கிருந்த தனிநபருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து ஏசி வசதியுடன் கூடிய கேபின்களை வைத்தனர்.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பச்சையம்மன் கோயிலுக்கு செல்லும் பாதையை நித்தியானந்தா சீடர்கள் ஆக்கிரமித்தால் ஆத்திரமடைந்த மக்கள் அவர்களை காலி செய்யுமாறு கூறினர்.
கேபின்கள் நொறுக்கினர்
அவர்கள் கேட்காததால் அவர்களை அடித்து விரட்டிவிட்டு, அங்கு அமைக்கப்பட்ட கேபின்களை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு வழக்கு
நித்தியானந்தா போகுமிடமெல்லாம் நிலங்களை ஆக்கிரமிப்பது வழக்கம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்று பகுதியில் அவரது ஆண், பெண் சீடர்கள் கொட்டகை அமைத்து நித்தியானந்தாவின் சிலைகளை நிறுவினர்.
குடிசைகள் பிய்த்து...
இதைத் தொடர்ந்து வருவாய் துறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை. பின்னர் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களின் துணையோடு வருவாய் துறை அதிகாரிகள் குடிசைகளை பிய்த்து எறிந்தனர்.
சாபம் இட்டனர்
இதைத் தொடர்ந்து பெண் சீடர்கள் போலீஸாருக்கு சாபம் இட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று திரிசூலம் பகுதியில் ஆக்கிரமிக்க சீடர்கள் முயற்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.