ரேஷன் கடையில் காலாவதி பிஸ்கட் விற்பனை .... அதிர்ச்சியில் நெல்லை மக்கள் முற்றுகை
நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான பிஸ்கட்டை ஊழியர்கள் விற்பனை செய்து வருவதால் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை: நெல்லை அருகே ரேஷன் கடையில் காலாவதி பிஸ்கட் விற்கப்பட்டதை எதிர்த்து பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், ஏர்வாடி பேரூராட்சி பகுதியில் உள்ள சுமார் 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு 5 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 3-வது தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இத்துடன் பிஸ்கட் பாக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டது. அதில் தயாரிப்பு தேதி பிப்ரவரி 2017 என்றும் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக நாங்குநேரி வட்ட வழங்கல் அதிகாரி ரேவதி சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் பொது மக்களுக்கும் தெரிய வரவே அவர்கள் ரேஷன் கடை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த ரேவதி சங்கர் பாக்கெட்டை வாங்கி பார்த்து காலாவதியாகி விட்டதை உறுதி செய்து பிஸ்கட்டை விற்க வேண்டாம் என்று கடை ஊழியர்களிடம் தெரிவித்து சென்றார்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் பிஸ்கட் சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வயிற்று போக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்தோம். அது போன்று இங்கும் நடந்து விட கூடாது என்பதால் இதை தடுத்து நிறுத்தினோம் என்று தெரிவித்தனர்.