மதுரை கிரானைட் முறைகேடு... இனி சென்னையிலும் புகார் அளிக்கலாம்!
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் சென்னை மற்றும் மதுரையில் புகார் அளிக்க வேண்டிய முகவரியை வெளியிட்டுள்ளார் சகாயம் ஐ.ஏ.எஸ்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த புதன்கிழமை மதுரைக்கு வந்து சேர்ந்த சகாயம், முதலில் தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்தும் சகாயம் புகார் மனுக்களை பெற்றார். முதல் கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சகாயம், கிரானைட் முறைகேடு தொடர்பாக புகார் மனுக்களை தொடர்ந்து அளிக்கலாம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கிரானைட் முறைகேடு தொடர்பான புகாரினை இனி மதுரை மட்டுமல்லாது, சென்னையிலும் அளிக்கலாம் என சகாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரானைட் முறைகேடு தொடர்பான புகார் அளிக்க விரும்புபவர்களின் வசதிக்காக சென்னையிலும் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். அறிவியல் நகரம், காந்தி மண்டபம் சாலை, கோளரங்க வளாகம், சென்னை 25 என்ற முகவரியில் புகார் மனுக்கள் பெறப்படும்.
மதுரையில் புகார் அளிக்க விரும்புபவர்கள் பூமாலை வணிக வளாகம், காந்தி நகர், மதுரை 20 என்ற முகவரியிலும் அளிக்கலாம் என இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.