அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை- திருச்சி கமிஷனர் அறிவிப்பு
திருச்சி: திருச்சியில் தேர்தலையொட்டி அனுமதியின்றி சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார்யாதவ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாநகர காவல் துறைக்கு கட்டுபட்ட பகுதிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 12 ஆம் தேதி முதல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இதன் மேற்பார்வையாளராக மது விலக்கு அமல் ஆய்வு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி ஆணையர் புகழேந்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் 24 மணி நேரமும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகள் 12 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளது. திருச்சி மாநகரத்தில் 8 சோதனை சாவடிகள் இயங்கி வருகிறது. இடைத்தேர்தலையொட்டி கூடுதலாக கும்பகோணத்தான் சாலை, மற்றும் ஸ்ரீரங்கம் பெண்கள் போலீஸ் நிலையம் எதிரே ஆகிய 2 இடங்களில் மேலும் 2 சோதனை சாவடிகளை அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் 2 பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையினருடன் இணைந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் தேர்தல் சம்பந்தமாக எந்த ஒரு தகவலையும் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கலாம். பொதுமக்கள் பார்க்கும் இடங்களில் சுவர் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கட்சியினரும் தேர்தல் நடத்தை விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.
புகார்கள் குறித்து 0431-2331043 என்ற எண்ணுக்கும், [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.