போகி பண்டிகை: கடந்த ஆண்டைவிட குறைவாக 'கொளுத்திய' சென்னை வாசிகள் !
சென்னை: சென்னையில் இன்று கொண்டாடப்பட்ட போகிப்பண்டிகையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைவான காற்று மாசு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதற்கு ஏற்ப, பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாய், துடைப்பம், துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை எரித்து, மக்கள் போகியை வரவேற்றனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மக்கள், தங்களது கஷ்டங்கள் கழிந்து, புதிய சந்தோஷங்கள் வாழ்க்கையில் மலர இறைவனை வேண்டிக்கொள்வதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போகி பண்டிகையின்போது, சென்னைவாசிகள் குறைவான அளவு பொருள்களை எரித்துள்ளனர்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலால் டயர்கள் கொளுத்துவது போன்றவை இந்த முறை குறைந்து காணப்பட்டது. எனினும் பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்துவது போன்ற வழக்கமான சம்பவங்கள் அரங்கேறின.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின்படி, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட திருவொற்றியூர், அண்ணாநகர், தியாகராய நகர், மீனம்பாக்கம், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் கடந்த ஆண்டைவிட குறைந்த அளவே காற்று மாசு பதிவாகியுள்ளது.
மேலும், ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் கடந்த ஆண்டைவிட சற்று அதிகமாக காற்று மாசு பதிவாகியுள்ளது. ஆனால், அடையாறு, அம்பத்தூர் மண்டலங்களில் கடந்த ஆண்டைவிட மிகஅதிக அளவில் காற்று மாசு பதிவாதியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.