"தனியார் பஸ்சே பரவாயில்லை போல......" - அரசு பேருந்துகளிலும் அதிக கட்டணம் வசூல்
தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்கப்பட்ட பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள மக்கள், நடத்துனரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை: தற்காலிக பணியாளர்களை கொண்டு இயக்கப்படும் பேருந்துகள் தனியார் பேருந்துகளைப் போல அதிகளவு டிக்கெட் வசூலிப்பதாக கூறி பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் நெல்லையில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை நியமித்து அரசு ஒரு சில பஸ்களை இயக்கி வருகிறது. தென்காசியில் இருந்து நெல்லைக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சில பேருந்துகள் இயங்கின.
இந்நிலையில், தற்காலிக பணியாளர்களை கொண்டு இயங்கும் இந்த பேருந்துகளில் வழக்கத்தை விட டிக்கெட்டிற்கு 5 ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இதுகுறித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரிலே இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடத்துனர் கூறியதை ஏற்காத மக்கள் தனியார் பேருந்தை போல அரசு பேருந்துகளும் கொள்ளையில் ஈடுபட்டால் எப்படி என அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.
தற்காலிக ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் தரவேண்டிய தினக்கூலியையும் அதிகாரிகள் பயணிகள் டிக்கெட் கட்டணத்திலே வசூலித்து கொடுப்பதற்காக தான் இவ்வாறு செய்வதாகவும் மக்கள் புகார் அளித்தனர். அவசர நேரத்தில் உதவுவதற்காக வந்த தற்காலிக பணியாளர்களை மக்களிடம் சிக்கவைக்கும் இவ்வாறான சுயநலம் பிடித்த அதிகாரிகளால் தான் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.