ஷாக்கிங்.. கோவையில் அரசு மகளிர் கல்லூரி இல்லாத அவலம்.. பெண்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் கொடுமை!
கோவையில் பெண்கள் அரசு கலைக்கல்லூரி துவங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை: பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு என்ற முறையே பல ஆண்டுகளாக கோவை அரசு கலை கல்லூரியில் பின்பற்றி வருவதால் அதிக மதிப்பெண் பெற்றும், ஏழை எளிய மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக மாறி உள்ளது. மேலும் அரசு கலைக்கல்லூரி இல்லாத காரணத்தினால், மாணவிகள் பள்ளிப்படிப்போடு கல்வியை நிறுத்தி கொள்ளும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
கோவையில், அரசுக் கலைக் கல்லூரி துவங்கி 165 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆண்களுக்காகவே துவங்கப்பட்ட இக்கல்லூரியில், 1996 ஆம் ஆண்டில் இருந்து 30 சதவிகித இடஒதுக்கீட்டு முறையில் பெண்களும் சேர்க்கப்பட்டன. அப்போது, மாணவியரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
30% போதுமானதாக இல்லை
தற்போது, மாறிவரும் நவீன யுகத்தில், பெண்கள் அனைத்து துறைகளிலும், கால்பதித்து வருகின்றனர். ஆண்டுதோறும், கோவை அரசு கல்லூரியில் விண்ணப்பித்து வரும், மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடைமுறையில் இருக்கும், 30 சதவீத இடஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், மாணவியர் சேர்க்கை தடைபடுகிறது. இதனால், அனைவருக்கும் கல்வியை அளிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
அரசு மகளிர் கல்லூரி இல்லை
புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மாணவ , மாணவியருக்கு தனித்தனி, அரசு கல்லூரிகள் உள்ளன. இது போல பல்வேறு மாவட்டங்களில் அரசு மகளிர் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஆனால் கோவையில் அரசு மகளிர் கல்லூரி இல்லாமல் உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அபரிதமான வளர்ச்சியடைந்து வரும் கோவையில், பெண்களுக்கென அரசு கல்லூரி இல்லாதது, கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
பாதியிலேயே படிப்பு நிறுத்தம்
ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும், மாணவியர் எண்ணிக்கை, 60 சதவீதமாக உள்ளது. பெண்களுக்கென வழங்கப்படும், 30 சதவீத இடஒதுக்கீடால், நல்ல மதிப்பெண் பெறும் மாணவியருக்கும் இடம் கிடைப்பதில்லை. இடம் கிடைக்காத மற்ற மாணவிகள் வருடந்தோறும் மிகுந்த வருத்தத்துடன் போகும் நிலையே காலம் காலமாக இருந்து வருகிறது. பொருளாதார வசதியுள்ளவர்கள், தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். ஏழை மாணவியர் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இடஒதுக்கீட்டை அதிகரிப்பதும், பெண்களுக்கென அரசு கல்லூரி துவங்குவதே இதற்கு தீர்வாக கூறப்படுகிறது .
அரசு மகளிர் கல்லூரி வேண்டும்
உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் , பெற்றோர்களும் மாணவிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதில் குறிப்பாக சிறுபான்மையினருக்கு மூன்று சதவிகிதம் மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதால், அதிக மதிப்பெண் எடுத்தும் அவர்களால் உயர்கல்வியை துவங்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு மகளிர் கல்லூரி துவங்குவது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே பெண்கள் உயர்கல்வியை பெற்று சமூக அந்தஸ்துடன் தலைநிமிர்ந்து வாழ கோவை மாணவிகளுக்கு அரசு கல்லூரி மிகவும் அவசியம்.