தேவேந்திரகுல மக்கள் பட்டியல் இனத்தவர்களாக இணைக்கப்பட்டது வரலாற்றுப்பிழை: கிருஷ்ணசாமி
தேவேந்திரகுல வேளாளர்களை ஒரே பெயரில் அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தேவேந்திரகுல மக்கள் பட்டியல் இனத்தவர்களாக இணைக்கப்பட்டது வரலாற்றுப்பிழை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். பட்டியலினப் பிரிவிலிருந்து தேவேந்திரகுல மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூரில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியலினப் பிரிவிலிருந்து விடுவிக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வரலாற்றுப்பிழையாக தேவேந்திரகுல மக்கள் பட்டியல் இனத்தவர்களாக தவறாக இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல வேளாளர்களை ஒரே பெயரில் அழைத்திட வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பங்கை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.