குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து சனிக்கிழமை மாலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வருகின்ற மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் கடந்த சில நாட்களாக குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதன் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களை குற்றாலத்தில் கழிப்பதற்காக வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.