பட்டப்பகலில் கல்லூரி மாணவன் கொலை.. வள்ளியூரில் மக்கள் சாலை மறியல்.. போலீஸ் தடியடி!
வள்ளியூர்: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலைமறியல் செய்தவர்களை தடியடி நடத்தி போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்த நம்பியான்விளையைச் சேர்ந்தவர் டேவிட் ராஜா. இவர் வள்ளியூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.
இன்று இவர் கல்லூரிக்கு சென்ற போது ஒரு மர்ம கும்பல் வழிமறித்து அவரை சராமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து தகவல் அறிந்த அம்மாணவனின் உறவினர்கள் கொலைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நெல்லை-நாகர் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.
போலீசார் மறியலில் ஈடுப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லாததால் கூட்டத்தை கலைக்க தடியடி பிரயோகம் நடத்தினர். இதில் சிலர் காயமடைந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் .இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மாணவன் கொலையால் வள்ளியூர்,மற்றும் சுற்றுவட்டராப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் பேருந்துக்களை பாதுகாப்போடு அனுப்ப போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்க அதிரடி படையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படங்கள்: ஜெபக்குமார்