இந்த ஆட்சியை மக்கள் விரும்பலை... நான் முதல்வராக ஆசைப்படலை- டிடிவி தினகரன்
அதிமுக எங்கள் கட்சி என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மக்கள் விரும்பவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: இந்த ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும் தனக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசையில்லை என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி பிரபு எல்எல்ஏ போல பல எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாக ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும், டிடிவி தினகரனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதல்வரை விரும்பவில்லை
அப்போது பேசிய டிடிவி தினகரன், இந்த ஆட்சி கவிழக்கூடாது என்பதற்காகவே பல எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருப்பதாக கூறினார். முதல்வர், துணை முதல்வர், சில அமைச்சர்களை மக்கள் விரும்பவில்லை.
பலர் தொடர்பில் உள்ளனர்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவைப் போல பல எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அதிமுக எங்கள் கட்சி, அந்த 6 பேரைத்தவிர வேறு யார் வந்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்.
18 பேரில் ஒருவர் முதல்வர்
நான் முதல்வராக விரும்பவில்லை. அந்த ஆசையும் எனக்கு இல்லை. எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் எம்எல்ஏவாக மட்டுமே இருப்பேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறியுள்ளார்.
ஆட்சி தானாக கவிழும்
இப்போது இருக்கும் இருக்கும் சூழ்நிலையில் தேர்தல் வரவேண்டும். மேலும் பல எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வர தயாராகவே இருக்கின்றனர். அவர்கள் வந்தால் இந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.