நெல்லை அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்- ஆட்டை கடித்ததால் பொதுமக்கள் பீதி!!
நெல்லை: நெல்லை விக்கிரம சிங்கபுரத்தில் ஆட்டை கடித்து விட்டு சிறுத்தை ஓடியதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம் டாணா ஆம்பூர் மெயின் ரோட்டில் வசிக்கும் கூலித் தொழிலாளி நடராஜன். இவர் தனது வீட்டில் ஆடு வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டின் முன்பு கட்டி போட்டிருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன் மறறும் அவரது குடும்பத்தினர் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது சிறுத்தை ஓன்று ஆட்டின் தலையை கடித்து குதறி கொண்டிருந்தது. அவர்கள் ஆவேசமாக குரல் எழுப்பியதால் ஆட்டை போட்டு விட்டு சிறுத்தை தப்பி ஓடி விட்டது. சிறுத்தை கடித்ததில் ஆடு படுகாயம் அடைந்தது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் சிறிது நேரம் அங்கு முகாமிட்டு சிறுத்தையை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை வனத்துறையினர் பிடியில் சிக்கவில்லை.
இதுகுறித்து தொழிலாளி நடராஜன், நாங்கள் இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும மேலாக வசித்து வருகிறோம். கடந்த ஓராண்டாகதான் இந்த சிறுத்தை நடமாட்டம் உள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதங்களாக சிறு்த்தை அடிக்கடி வர தொடங்கியுள்ளது. இதனால் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையிலும் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் திகிலுடன் தெரிவித்தனர்.