கடையத்தில் மீண்டும் சிறுத்தையின் அட்டகாசம் – அச்சத்தில் பொதுமக்கள்!
கடையம்: கடையம் அருகே பெத்தான் பிள்ளை எனும் குடியிருப்பு கிராமத்தில் மீண்டும் ஒரு சிறுத்தை அட்டகாசத்தில் ஈடுபட்டதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கடையம் அருகே பொது மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை ஒன்று அக்டோபர் 3 ஆம் தேதி பிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இரண்டு நாட்களுக்கு முன்பு ராசு என்பவரது வீட்டில் உள்ள இரண்டு நாய்களை பிடித்துச் சென்றுள்ளது. மேலும், இன்று சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மணிகண்டன் என்பவரது வீட்டின் தொழுவத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை சுமார் 200 அடி தூரம் இழுத்துச் சென்று கடித்துக் குதறி தப்பிவிட்டது.
இதனைப் பார்த்த மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள், கிராமத்துக்குள் சிறுத்தை வந்து சென்றுள்ளதை உறுதி செய்தனர்.
கால்நடைகளுக்கே இந்த நிலை என்றால் குழந்தைகள் மற்றும் மனிதர்களின் நிலை என்னவாகும் என்று அச்சத்தில் உள்ள மக்கள், உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.