மக்களின் உணர்வோடு கலந்திருந்த கொள்ளிடம் பாலம்.. பராமரிப்பின்றி உடைந்த சோகம்!
திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் நேற்று இரவு உடைந்தது.
Recommended Video
திருச்சி: திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் நேற்று இரவு உடைந்தது. இது அந்த பகுதி மக்களை பெரிய சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
நேற்று இரவோடு இரவாக திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது. இந்த நிலையில்தான் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் உடைந்துள்ளது.
கொள்ளிடம் பாலம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த இரும்பு பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டப்பட்ட பின் பழைய கொள்ளிடம் இரும்பு பாலத்தில் குறைவான எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்றுவர அனுமதிக்கப்பட்டது. இப்போதும் அது தொடர்கிறது.
முக்கியமானது
முன்பெல்லாம் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வர வேண்டும் எனில் இப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். தினமும் லட்ச கணக்கான வாகனங்கள் பயணித்து வந்த இந்த பாலம் இது. தென் மாவடங்களில் இருந்து கோட்டையை நோக்கி வர வேண்டும் என்றால் இப்பாலத்தை கடந்து தான் வரவேண்டும். அப்படிப்பட்ட பாலம்தான் உடைந்துள்ளது.
துணைப்பாலம் கட்டப்பட்டது
ஏற்கனவே இப்பாலத்தின் ஸ்திரதன்மை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்பாலத்தின் அருகிலேயே துணைப்பாலத்தை கட்ட உத்தரவிட்டார். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு 47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழிச்சாலையுடன் புதிய பாலம் கட்டப்பட்டது. தற்போது அப்பாலம் தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
பராமரிக்கவில்லை
அதன்பின் அந்த இரும்பு பாலம் பராமரிக்கப்படவில்லை. ஏறத்தாழ 94 வருட பாரம்பரிய பாலத்தை பேனி பாதுகாக்க நம்மால் முடியவில்லை என்பது தான் இந்த பாலம் உடைய காரணம். இரும்பு பாலத்தின் அருகிலேயே மணல் கொள்ளை வேறு நடந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாலத்தின் ஸ்திர தன்மை குறைந்து நேற்று இடிந்துள்ளது.
|
மக்களின் உணர்வு
பிரதமர்கள், முதல்வர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சினிமாதுறையினர் என்று முக்கியஸ்தர்கள் இப்பாலத்தின் மீது பயனித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த பாலம் அந்த மக்களிடம் உணர்வோடு கலந்துள்ளது. கிட்டத்தட்ட 100 வருடம் பயன்படுத்தப்பட்ட பாலம் இல்லாதது அந்த மக்களை வருந்த செய்துள்ளது.
இந்த வீடியோவை திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து ஜெய்கார்த்திக் நாகரத்தினம் என்ற ஒன் இந்தியா தமிழ் வாசகர் சுட சுட அனுப்பியுள்ளார்.