வேலூர் அருகே சிவன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு... கோவிலில் குவிந்த பக்தர்கள்
வேலூர்: வேலூர் அருகே உள்ள குடியாத்தத்தில் சிவபெருமான் சிலை கண் திறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் டவுன் நடுப்பேட்டையில் ராஜாஜி ரோடு, காந்திரோடு சந்திப்பில் பிரசித்திபெற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள கோபுரத்தில் சிவன் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையைக் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடியின் வழியாக சிவபெருமானை பக்தர்கள் தரிசித்து வழிபடுகின்றனர்.
நேற்று இரவு திடீரென கோபுரத்தில் உள்ள சிவன் சிலை கண் திறந்ததாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் பக்தி பரவசத்துடன் சிவபெருமானை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் பக்தர்கள் வருகை அதிகமானதால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. அதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு வந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
இந்த தகவல் வெளியூர்களுக்கும் பரவியதால், நூற்றுக்கணக்கானோர் வெளியூர்களில் இருந்து வந்தும் சிவனை வணங்கி செல்கின்றனர்.