22 வருடங்களுக்குப் பிறகு ”சொந்த வீடு” பெற்ற நீலகிரி கிராம மக்கள்- நனவான சகாயத்தின் கனவு!
நீலகிரி: நீலகிரியில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சகாயம் பரிந்துரைக்கு ஏற்பட்ட வெற்றியாக 22 ஆண்டு போராட்டத்துக்கு பின்பு சுற்றுவட்டார கிராம மக்கள் சொந்த வீட்டினைப் பெற்றுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பென்னை, நாகம்பள்ளி, மண்ணரை, புலியம், காப்பூர், மண்டக்கரா, நெல்லிக்கரை உள்ளிட்ட பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது.
அதனால், இப்பகுதிகளில், வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பொதுமக்களுக்கான பணிகளை மேற்கொள்ள வனத்துறையின் தடை உள்ளது.
மாற்றிடம் வழங்கும் திட்டம்:
இதையடுத்து கடந்த,1991ம் ஆண்டு கூடலுார் ஆர்.டி.ஓவாக சகாயம் இருந்த போது இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்தார்.
கோல்டன் ஷேக் திட்டம்:
இதன் தொடர்ச்சியாக பந்தலுார் அருகே சன்னக்கொல்லி பகுதியில் 751 ஏக்கர் வன நிலம் வருவாய்துறைக்கு நில அளவை செய்து ஒப்படைக்கப்பட்டது. 750 குடும்பத்தினர் காப்பகத்தினுள் குடியிருந்து வரும் நிலையில் ஒரு சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் "கோல்டன் ஷேக்" திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் பணத்தை வனத்துறையிடம் பெற்றுகொண்டு வெளியேறினர்.
பூமி பூஜையுடன் துவக்கம்:
பெரும்பாலானோர் அங்கேயே இருந்த நிலையில், முதல் கட்டமாக பென்னை, நெல்லிக்கரை பகுதிகளை சேர்ந்த 88 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, 8.80 கோடி ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக 37 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாற்றிடம் வேண்டி விண்ணப்பித்ததை அடுத்து அவர்களுக்கு வீடு கட்டும் பணி நேற்று சன்னக்கொல்லி அருகே ஆராங்குளம் பகுதியில் பூமி பூஜையுடன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு கிராம மக்களின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வாசு, கோபாலன், பாலகிருஷ்ணன், சுகுமாறன், கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.
22 ஆண்டு கனவு:
கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டாசியராக இருந்த சகாயம் அவர்கள் பரிந்துரை செய்த இத்திட்டம் மூலம் தற்போது எங்களுக்கு வீடு கிடைத்துள்ளது. அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இப்பகுதிக்கு "நெல்லியாளம்பதி" என பெயர் வைக்க உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.