வரப் போகுது மழைக்காலம்.. சென்னை வீடுகளில் அத்துமீறி குடியேறும் கொசுக்கள்.. டெங்கு பீதியில் மக்கள்
சென்னை: மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் சென்னை வீடுகளில் கொசுக்கள் வரத் தொடங்கிவிட்டதால் பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கண்டு அச்சத்தில் உள்ளனர்.
வேப்பம் இலைகளை கொளுத்தி போடுவது கொசுவர்த்தி சுருள், லிக்விடேட்டர் போடுவது உள்ளிட்டவற்றை போட்டு நம் வீடுகளில் கொசுக்களை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள நினைக்கிறோம். ஆனால் இவற்றுக்கு முக்கால்வாசி கொசுக்கள் மசிவதில்லை.
இந்நிலையில் தமிழகத்துக்கு பயனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க போகிறது. இந்நிலையில் சென்னையில் கொசுக்கள் வீடுகளுக்கு புகுந்து காதுகளில் ரீங்காரமிடுகின்றன.
குப்பைகள்
கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவும். இவற்றில் டெங்கு , மலேரியா காய்ச்சல்கள் உயிரை குடிக்கும் நிலை ஏற்படும். இவற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள மழை காலம் தொடங்குவதற்கு முன்பே வீட்டை சுற்றியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
உயிரிழப்பு
தேவையில்லாத டயர்கள், பூத்தொட்டிகள், காலி டப்பாக்கள், வாட்டர் கேன்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கேரளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தை தொடர்ந்து அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
நீ்ர் நிலை
அதுபோல் தமிழகத்தில் பருவமழையின் போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனில் நீர் நிலைகளை தூர்வார அரசு முனைப்பு காட்ட வேண்டும். ஆங்காங்கே மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
அரசு துரிதம் காட்ட வேண்டும்
தண்ணீரை எப்போதும் காய்ச்சி குடியுங்கள். அவ்வப்போது நீர் நிலை தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். வந்த பின் அவதிப்படுவதை விட, வருமுன் காப்போம் என்ற இலக்கை அடைய அரசும் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.