மர்மக் காய்ச்சலுக்கு பயந்து சொந்த கிராமத்தை விட்டு வெளியேறும் மக்கள்! - வீடியோ
சிவகங்கை: சிவகங்கை மேப்பல் கிராமத்தில் உள்ள மக்களை மர்மக்காய்ச்சல் தொடர்ந்து தாக்கி வருவதால், அவர்கள் கிராமத்தை விட்டு வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். குடிநீரால் இந்தக் காய்ச்சல் பரவுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகங்கை காளையார்கோவில் அருகில் உள்ளது மேப்பல் கிராமம். இங்கு மக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிக்கடி மர்மக்காய்ச்சல் வந்து அச்சுறுத்துகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்றால், வெறும் மாத்திரைகளை மட்டும் கொடுத்து அனுப்பிவிடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், வசதியுள்ளவர்கள் சிவகங்கை, மதுரை, காரைக்குடி என நகரங்களுக்குச் சென்று தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர். இருந்தபோதும் அது என்ன வகையான காய்ச்சல் என்று கண்டறிய முடியவில்லை.
இதனால், அந்த மர்மக்காய்ச்சலுக்கு பயந்து மேப்பல் கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். ஆனால், இதுவரை அரசு அதிகாரிகள் அங்கு சென்று எந்த ஆய்வும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.