சேலம் வங்கியில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகம் ஆரம்பம்… மக்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்க தொடங்கி இருப்பது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் இன்னல்களை சந்தித்து வந்த தமிழக மக்களிடையே புதிய 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்க தொடங்கி இருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதற்கட்டமாக புதிய ரூ.500 நோட்டு விநியோகம் சேலத்தில் தொடங்கியிருக்கிறது. அதன்படி, சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் புதன்கிழமை (இன்று) பிற்பகலில் புதிய ரூ.500 நோட்டு விநியோகிக்கப்பட்டது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் பரவலாக ரூ.500 விநியோகிக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.
ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட்டது.
பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூ.2000 நோட்டு தரப்பட்டது. ஆனால், அதற்கு சில்லறை கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். பெரும்பாலான மக்கள் ரூ.2000-க்கு பதிலாக ரூ.500 நோட்டுகளை முதலில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்றும் வருத்தத்துடன் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ரூபாய் நோட்டு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையிம்போது, "பாதுகாப்பு காரணங்களால், தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை நேரடியாக இப்போது தெரிவிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அது தொடர்பாக ரகசிய அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, புதிய .500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் சில்லறை தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சேலம் முதல் அக்ரஹாரம் கரூர் வைஸ்யா வங்கியில் புதிய 500 ரூபாய் நோட்டு விநியோகிக்கப்பட்டது. அந்த புதிய நோட்டை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.இதனால் தமிழகம் முழுவதும் விரைவில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்துவிடும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.