காவிரி- தேவையில்லாமல் அரசியல் செய்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும் - சொல்வது செல்லூர் ராஜூ
காவிரி விவகாரத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்பவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை : காவிரி விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்பவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை விளாங்குடியில் ரூ 42 லட்ச ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு தமிழகத்தின் உரிமைகளை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் போராடி வருகிறது. மக்களின் தேவைக்காக சிறப்பான திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வரும் இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள். ஆனால் சிலர் இந்தப் பெருமைகளை சிதைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள்.
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகம் சார்பில், மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யாத திமுக தற்போது அரசியல் லாபத்துக்காக கபட நாடகம் ஆடிவருகிறார்கள்.
திமுகவின் துரோகத்தை மக்கள் நன்கு அறிவார்கள். இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கி வருபவர்களையும் அவர்கள் அறிவார்கள். எனவே தேவை இல்லாமல் மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.