கதறக் கதற ஓட விட்ட மழை... கடந்தகால சேமிப்பை இழந்து... எதிர்கால பயத்தோடு மக்கள்!
சென்னை: கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என செய்திகள் ஒரு வரியில் சொல்லி விடுகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும், மழை அடித்துச் சென்றது வெறும் பொருட்களை மட்டுமல்ல... அவர்களது எதிர்கால உழைப்பை, சேமிப்பை என்று.
இந்தாண்டு இதுவரை பெய்த வடகிழக்கு பருவமழையே, சின்னச் சுனாமியாக மாறி சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது.
இந்த மழையால் இப்படி ஒரு வெள்ளம் வரும் என சென்னை மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஷாக் கொடுத்த மழை...
எப்போதும் போல, இந்தாண்டும் குடிசைகளைத் தேடித் தான் வெள்ளம் ஓடும் என மக்கள் அஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் பிளாட்டுகள் மற்றும் வசதி மிகுந்தோர் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.
வெள்ளத்தில் மிதந்த பொருட்கள்...
இதனால், கார், பைக், பிரிட்ஜ், டிவி, வாஷிங் மிஷின் என வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறிய மக்களால், வீடுகளில் மனதை மட்டுமே விட்டுச் செல்ல முடிந்தது.
சிறுகச் சிறுக சேர்த்தது...
கடந்த வார கனமழையால் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் மழை நின்றதும், மீண்டும் வீட்டிற்குத் திரும்பி, ரிப்பேரான பொருட்களை சரி செய்ய கண்ணீரோடு திரும்பி வந்தனர். கடந்த காலங்களில் தாங்கள் சிறுகச் சிறுக சேமித்தவற்றை மழை நீர் அடித்துச் சென்று விட்ட சோகம் அவர்கள் முகங்களில் தென்பட்டது.
மீண்டும் துரத்திய மழை...
மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக, அங்கேயிங்கே என கடன் வாங்கி அவசர அவசரமாக மீண்டும் பொருட்களை ரிப்பேர் செய்தனர் சிலர். ஆனால், மீண்டும் அவர்களை மழைத் துரத்தியது.
சோதனை மேல் சோதனை...
பல இடங்களில் மீண்டும் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால், பட்ட காலிலேயே படும் என்பது போல மக்களுக்கு சோதனை மேல் சோதனை. மீண்டும் வாழ்க்கையை ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டுமா என்ற வேதனை பலரது முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது.
பொங்கியெழுந்த இயற்கை...
இயற்கை பொங்கியெழுந்தால், அதன் முன் மனிதர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதற்கு இந்தாண்டு மழையே ஒரு உதாரணம். வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு மாதத்திற்கு மிச்சமிருக்கிறது.
தொடரும் பீதி...
இதனால் பல இடங்களில் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் எப்போது வீட்டிற்கு திரும்புவது என்ற கேள்விக்கு பதிலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் மீண்டும் மழை பெய்து, வெள்ளம் வந்தால் என்ன செய்வது என்ற பயம் தான்.
விழித்துக் கொள்வோமா...?
காடுகளை அழிப்பதால் வன விலங்குகள் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்து வருவது நாம் அடிக்கடி கேள்விப்படும் ஒன்று தான். அந்தவகையில் தற்போது நீர்நிலைகளை அழித்து ஆக்கிரமிப்புகள் செய்ததால், வீடுகளைத் தேடி வெள்ளம் வருகிறது என்ற உண்மையை மக்களுக்கு புரிய வைத்துள்ளது இந்த மழை என்றால் மிகையில்லை.