அவினாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன்
இந்த முறையும் அவினாசி - அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தாவிட்டால் பெரும் போராட்டம் நடக்கும் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசு பட்ஜெட்டில் அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு ரூ. 1789 கோடி ஒதுக்கப்பட்டத்து குறித்து வழக்கம் போல கண் துடைப்பாக இருக்கக்கூடாது என்று கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், கொங்கு பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு ரூ.1789 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொமதேகவின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டும் அறிவிப்பு
அந்த அறிக்கையில், இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை ரூ.1,789 கோடியில் செயல்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்பட இருக்கிறது என்று அறிவித்தது எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்காக கடந்த நிதிநிலையில் அறிவிக்கப்பட்ட ரூ.250 கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படாதது வேதனையளிக்கிறது.
மக்களை ஏமாற்றும் செயல்
நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் ரூ.250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதை கொங்குநாட்டு மக்கள் அனைவரும் வேடிக்கையாக பார்க்கும் சூழல் தான் ஏற்பட்டிருக்கிறது. அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை கடந்த 50 ஆண்டுகாலமாக தேர்தல் வாக்குறுதிகளாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் திட்டத்தை செயல்படுத்துவது போல பட்ஜெட்டில் நிதி அறிவிப்பை மட்டும் அறிவித்து மக்களை ஏமாற்ற நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
முழுமையான நடவடிக்கை
அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை மாநில அரசே செயல்படுத்தும் என்று நிதி ஒதுக்குவதும், அதன் பின்னர் மத்திய அரசிடமும், பாரத பிரதமரை சந்திக்கும் போதும் அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதும் கடந்த கால நிகழ்வுகளாகும். கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டு நிதிநிலையில் ஒதுக்கப்பட்டுள்ள மொத்தம் ரூ.500 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவித்து, இனியும் பல காரணங்களை சொல்லி அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை கிடப்பில் போடாமல் உடனடியாக திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்களின் விவசாய வாழ்வாதாரத்தை காப்பதற்கும், குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் இந்த திட்டம் முக்கியமானதாகும். அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்காக நடைப்பயணம், கடையடைப்பு, பைக் பேரணி, மொட்டை அடித்தல், பெயர்பலகை திறப்பு மற்றும் சாகும்வரை உண்ணாவிரதம் என மக்கள் போராடாத போராட்டங்களே கிடையாது.
கொங்கு மக்களின் கோரிக்கை
அவினாசி - அத்திக்கடவுக்காக போராடி போராடி மக்கள் சோர்வடைந்து விட்டார்கள் என்று எண்ணி திட்டத்தை நிறைவேற்றாமல் நிதி ஒதுக்குவது போல மக்களை முட்டாளாக்குகின்ற செயல் தொடருமானால் வருகின்ற காலங்களில் மிகப்பெரிய போராட்டங்களை ஆட்சியாளர்கள் சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே கொங்கு மண்டல மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை தொடங்குவதற்கான தேதியை அறிவித்து, உடனடியாக செயல்படுத்த தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.